எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு,கம்பஹா மற்றும் களுத்துரை மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் முடிவை இன்று எடுத்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று கூடிய கட்சியின் அதியுயர் பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த போதும்,மேல் மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகங்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அதியுயர் பீடம் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளது.
குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த கிழக்கு மற்றும் வட மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் சேர்ந்து போட்டியிட்டன.இதே வேளை இந்த மாகாண சபைகளில் தலா மூன்று ஆசனங்கள் வீதம் பெற்றுள்ளதுடன்,வடக்கிலும்,கிழக்கிலும் நகர மற்றும் பிரதேச சபைகளி்ன் அதிகாரங்களை தமதாக்கியுள்ளது.60 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள சமூகங்களின் மக்கள் பிரதி நிதிகளை கொண்டுள்ளது.
ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை தமது தனிச்சின்னத்தில் மேல் மாகாண சபையில் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.
இன்றைய அதியுயர் பீட கூட்டத்தில் இந்த தேர்தல் பணிகளை கவனிக்கும் வகையில் குழுக்களும் நியமிக்கப்பட்டன.
கொழும்பு மாவட்ட பணிகளின் பொறுப்பாளராக –
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும்,கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,
கம்பஹா மாவட்ட பொறுப்பாளராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் தேசிய இணைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,
களுத்துரை மாவட்ட பொறுப்பாளர்களாக கட்சியின் தவிசாளரும்,முன்னால் அமைச்சரும்,கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கட்சியின் பிரதி தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
 
Comments[ 0 ]
Post a Comment